Wednesday 26 April 2017

செவ்வாயின் கிரக காரகத்துவங்கள்
------------------------------------------------------------


செவ்வாயின் காரக விளக்கங்கள்
சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகாமையில் பூமிக்கு அடுத்துள்ள கிரகம் செவ்வாயாகும். இந்த கிரகம் பூமியிலிருந்து பிரிந்து சென்று தனிக்கிரகமாக சூரியனை சுற்றி வருவதாக கூறப்படுகிறது. பூமி என்னும் நாம் வசிக்கும் மண் கோள் இரண்டாக உடைந்து , அதிலிருந்து தோன்றியதுதான் செவ்வாய் என்கிறார்கள். பொதுவாக மண் உருண்டை உடைந்தால் அது சுக்கு நூறாகவும் போகலாம், அல்லது சரி சமமாக இரண்டாகவும் உடையலாம். இங்கே பூமி உடைந்து சுக்கு நூறாக சிதறிப்போகாமல், இரண்டாக உடைந்து ஒரு பகுதி பூமியாகவும் , இன்னொரு உடைந்த பகுதி செவ்வாயாகவும் தனித்தனி சுற்றுப்பாதைகளில் சூரியனை சுற்றி வருகின்றன.  ஒரு மண் உருண்டை இரண்டாக உடைந்தால் , அந்த அரை உருண்டைகள் கடினமான பாறைகளை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் அந்த உடை பட்ட அரை உருண்டைகளின் விழிம்புகள் மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். எனவே இந்த செவ்வாய் கிரகம் கடினமான , கூர்மையான பாறைகளை கொண்டதாகும். பூமியிலிருந்து பார்க்கும்போது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் பூமியில் ஜீவ ராசிகள் வசிப்பதுபோல் செவ்வாயிலும் ஜீவ ராசிகள் வசிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
பூமியிலிருந்து பிரிந்த கிரகம் என்பதால் செவ்வாய்க்கு பூமகன் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பூமி, நிலம் போன்ற காரகம் செவ்வாய்க்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது.
பூமியில் வசிக்கும் நாம் பூமியை பூமித்தாய் என்கிறோம். அதாவது நாம் பூமியிலிருந்து தோன்றுவதால் பூ புத்திரர்கள் எனப்படுகிறோம். செவ்வாயும் பூமியிலிருந்து தோன்றியதுதான், ஆகவே செவ்வாய் நமக்கு சகோதர உறவு, மற்றும் நம் ரத்த சொந்தமாகும். இதன் அடிப்படையில் செவ்வாயை சகோதரக்காரகன் என்கிறார்கள். ரத்த சம்பந்தமான உறவுகளை குறிப்பதும் செவ்வாயாகும்.
ஆதி காலத்தில் மனிதன் கூரிய கற்களையே ஆயுதமாக பயன்படுத்தினான். கூர்மையான கடினமான பாறைகளை கொண்டது செவ்வாய் என்பதால் செவ்வாயை ஆயுதக்காரகன் என்கிறார்கள். ஆகவே அனைத்து விதமான ஆயுதங்களைக்குறிப்பது செவ்வாயாகும். ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளவர்களாகும். பூமியில் உள்ள கூர்மையான பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்கு உரியதாகும். இதன் அடிப்படையில் கூர்மையான பற்களையும் , கொம்புகளையும் கொண்ட மிருகங்களும் , கூரிய முட்களைக்கொண்ட தாவரங்களும் செவ்வாய்க்கு உரியவையாகும்.
ஆதி காலத்தில் மனிதன் கற்களிலிருந்துதான் நெருப்பை உருவாகினான். ஆகவே கற்களைக்குறிக்கும் செவ்வாயே நெருப்பையும் குறிப்பான். மனிதன் பயன்படுத்தும் கடினமான பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்கு உரியதாகும். உரல், உலக்கை, அம்மி, ஆட்டுக்கல் பொன்ற கல் பொருட்கள் செவ்வாய்க்கு உரியனவாகும்.
மனித உடம்பில் கடினமானதும் கூர்மையானதுமான உறுப்பு பற்களாகும். எனவே பற்களைக்குறிப்பவன் செவ்வாயாகும். உடல் எழும்புக்கு வலு சேர்ப்பவை எழும்பு மஜ்ஜையாகும். எனவே எலும்பு மஜ்ஜையை குறிப்பது செவ்வாயாகும். உடலில் செவ்வாயைப்போல் வலுவானதாகவும் சிவப்பு நிறமாகவும் காணப்படுவது தசைகளாகும். எனவே தசைகளுக்கு அதிபதி செவ்வாயாகும்.
உடலில் கூர்மையாகாவும் , விரைப்பாகவும் மாறி பெண்ணின் கன்னித்திரையை ஒரு ஆயுதம் போல் கிழித்து செல்லும் உறுப்பு ஆண் உறுப்பாகும். எனவே ஆண் குறியை குறிப்பது செவ்வாயாகும். ஆண் குறியில் பாயும் அதிக அளவு ரத்தமே அது விரைப்பு அடைவதற்கு காரணமாகும். ஆகவே ரத்தக்காரகனான செவ்வாயே வீர்யக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறான். உடலில் பாய்ந்தோடும் ரத்தம் சிவப்பு நிறத்தில் உள்ளதால் , அது செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
பூமியில் சிவப்பு நிறத்தில் காணப்படும் பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்கு உரியவையாகும். சிவப்பு நிறத்தில் உள்ள செம்பு உலோகம், பவள ரத்தினம், செம்பருத்தி மலர் போன்றவை செவ்வாய்க்கு உரியவையாகும்.
பூமியிலிருந்து பிரிந்து வந்த கிரகமான செவ்வாயை  பூமித்தாயின் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தவனாகப்பாவிக்கிறார்கள். அதாவது தாயின் வயிற்றில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டு வந்தவன் என்பதால் உடலில் ஏற்படும் ரத்தக்காயம், புண் மற்றும் உடம்பில் உள்ள தழும்புகளுக்கு காரணமானவன் செவ்வாயாகும். பூமித்தாயின் வயிற்றையே கிழித்துக்கொண்டு வந்த கிரகம் என்பதால், செவ்வாயை கொடூரன், இரக்கமற்றவன் என்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கும் குரு கிரகத்திற்கும் நடுவே நிறைய விண் கற்கள் சுற்றி வருகின்றன. இந்த வின் கற்களை போர்வீரர்களாகவும், செவ்வாயை போர்ப்படை தளபதியாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். தெய்வங்களில் முருகன் சேனாதிபதியாக உருவகப்படுத்தபட்டுள்ளான். ஆகவே செவ்வாய்க்கு அதி தேவதை முருகனாகும்.
மண்ணிலிருந்து பிரிந்து மண்ணை அள்ளிச்சென்ற கிரகம் என்பதால் மண்ணாசையை தரும் கிரகம் செவ்வாயாகும். உலகத்தில் நடக்கும் அத்தனை போர்களுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும், பங்காளி சண்டைகளுக்கும் மண்ணாசையே காரணமாகும். ஆகவே சண்டை சச்சரவுகளைக்குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் யுத்த களத்தில்தான் ஆயுதங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. யுத்த களத்தில் ரத்தம் சிந்தப்படுகிறது.
ஆயுதக்காரகன் செவ்வாய் என்பதால் ஆயுதங்கள் பயன்படுத்தும் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் வந்துவிடுவார்கள். நாவிதர்,கசாப்புக்கடைக்காரர், கொலைகாரர், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், காவலர், ராணுவத்தினர் போன்றோர் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளவர்களாகும்.
நெருப்புக்காரகன் செவ்வாய் என்பதால் நெருப்பை பயன்படுத்துபவர்கள் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவர். கொல்லர், சமையல்காரர் போன்றோர் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவர்.
மண் கிரகம் செவ்வாய் என்பதால் மண்ணில் வேலை செய்யும் விவசாயி, செங்கல் சூளைக்காரன், மண் பாண்டக்காரன்,கல் உடைப்போன் போன்றோர் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவர். மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்குரியதாகும். செங்கல்,மண் பானை,மண்ஓடு ,மண் அடுப்பு, மண் பொம்மைகள் போன்றவை செவ்வாய்க்குரியவையாகும்.

No comments:

Post a Comment

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்