Wednesday 26 April 2017

கிரக காரகங்கள்



குருவின் காரக விளக்கங்கள்
கிரகங்களில் உருவத்தில் மிகப்பெரியது குருவாகும். இந்த கிரகம் அதிவேகமும் இல்லாமல் மந்த வேகமும் இல்லாமல் மித வேகத்தில் நகர்ந்து செல்லும் கிரகமாகும். குருவின் நிறம் மஞ்சளாகும். குருவிலிருந்து வரும் மஞ்சள் நிறக்கதிர்களே சூரியனின் வெப்பத்தை குறைத்து பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு வழி வகை செய்கிறது. இதன் காரணத்தால் குருவை ஜோதிடத்தில் ஜீவக்காரகன் அல்லது உயிர்க்காரகன் என அழைக்கிறார்கள். முட்டையை உடைத்துப்பார்த்தால் அதன் உட்கரு மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிறம் குருவினுடையது. இதன் மூலம் உயிர்கள் தோன்றுவதில் குருவிற்கு இருக்கும் முக்கிய பங்கினை புரிந்துகொள்ளலாம்.
குருவானது உருவத்தில் பெரிய கிரகம் என்பதால் மனிதர்களில் முழுமையாக வளர்ச்சி பெற்ற மனிதர்களை குறிக்கிறது. அதாவது நடு வயதில் உள்ள மனிதர்களை குறிக்கிறது.
குரு உருவத்தில் பெரியதாக இருப்பதால் மற்ற கிரகங்களின் தாக்கம் குருவின் முன்னால் தோற்றுப்போய்விடுகின்றன. இதனால்தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுகிறார்கள். அதாவது சிறிய காந்த துண்டுகளை பெரிய காந்த துண்டுகள் கவர்ந்து இழுத்துக்கொள்ளும். கிரகங்கள் எல்லாம் பூமியைப்போல் காந்த துண்டுகளே.
உடல் பருமன் என்பது உடலில் அதிகம் கொழுப்பு சேர்வதால் உண்டாகிறது. பெரிய உருவம் கொண்டது குரு , எனவே கொழுப்புக்கு அதிபதி குருவாகும். மேலும் கொழுப்பு சத்துள்ள நெய், வெண்ணெய் போன்ற பதார்த்தங்கள் குருவிற்கு உரியவையாகும்.
ஒரு மனிதனை உயிரோடு வைத்திருப்பது பிராண சக்தி என்னும் மூச்சுக்காற்றாகும்.உயிர்க்காரகம் பெற்ற குரு ,பிராண சக்தியை குறிக்கிறார். பிராண சக்தி மூக்கின் வழியே சுவாசிப்பதன் மூலம் கிடைக்கிறது. எனவே மூக்கை குறிக்கும் கிரகம் குருவாகும்.
உருவத்தில் பெரிய கிரகம் குரு என்பதால் உடல் உறுப்புகளில் பெரியவை குருவுக்கு உரியனவாகும். உடல் வெளி உறுப்புகளில் மிகவும் பெரியது தொடியாகும். தொடையில்தான் அதிகம் கொழுப்பு தங்கியிருக்கும். உடல் உள்ளுறுப்புகளில் பெரியது கல்லீரலாகும். எனவே தொடை மற்றும் கல்லீரலை குறிப்பது குருவாகும்.
குரு மஞ்சள் நிறமுடையது என்பதால் மஞ்சள் நிற உலோகமான தங்கம், மஞ்சள் நிற ரத்தினமான புஷ்பராகம், மஞ்சள் நிற மலரான முல்லை ஆகியவை குருவிற்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது.
உருவத்தில் பெரியதும், நீண்ட சுவாசத்தை  உடையதும், நிதானமான நடையுடையதுமான யானை குருவிற்குரிய விலங்காகும்.
உருவத்தில் பெரியதாகவும், அதிகப்படியாக பிராண சக்தியை வெளியிடும் மரங்களான ஆல மரம், அரச மரம் போன்றவை குருவிற்குரியவையாகும்.
குருவின் நிறமும் மஞ்சள் , தீபம் மற்றும் ஹோமத்தீயின் நிறமும் மஞ்சள். தீபம் இல்லாத இறை வழிபாடு கிடையாது. மஞ்சள் பொடி, மஞ்சள் கனியான எலுமிச்சை, வாழப்பழம் போன்றவை இறை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. எனவே இறை வழிபாட்டைக்குறிக்கும் கிரகம் குருவாகும்.
குருவின்  நிறம் தீப நெருப்பை ஒத்திருக்கிறது. தீபங்களும், தீப்பந்தங்களும்  இருட்டை விலக்கும் வேலையை செய்கின்றன. குரு என்ற சொல்லின் பொருளும் இருட்டை நீக்குவது என்பதுதான். குருவும் உருவ பலத்தால் அனைத்து கிரக தோசங்களையும் நீக்கும் வலிமையுடையது. எனவே குருவை வழிகாட்டி, ஆசிரியர், குரு நாதர், நலம் விரும்பி என அழைக்கிறார்கள்.
மனிதனுக்கு இயற்கையாக பூமியில் அதிக பிராண சக்தியும்,காந்த சக்தியும் வட கிழக்கு திசையிலிருந்து கிடைக்கிறது. இதானால் வாஸ்து சாஸ்திரத்தில் வட கிழக்கு மூலையை குரு மூலை அல்லது ஈசான்ய மூலை என அழைக்கிறார்கள். மூக்கை அடைத்துவிட்டால் மனிதன் சுவாசிக்க முடியாமல் இறந்து விடுவான் , அது போல் வீட்டில் ஈசான்ய மூலையை முழுவதுமாக மூடிவிட்டால் வீட்டில் இறப்புகள் நிகழும், சந்ததிகள் வளராது.
வாசி யோகம் என்னும் பிராணயாம பயிற்சி ஆன்மீகத்தோடு தொடர்புடையது. இது மூக்கை பிடித்து பயிலும் கலை என்பதால் , மூக்குக்கு காரகனான குருவே இந்த கலைக்கும் அதிபதியாகும்.

27/04/2017 தினபலன்

27/04/2017 தினபலன்

ஹேவிளம்பி வருடம்      சித்திரை 14
பரணி நக்ஷத்திரம்   பிரதமை திதி
வியாழன் கிழமை

மேஷம்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப இன்று நீங்கள் நீண்ட தூரம் பயணித்து பதவி, புகழ் பெறுவீர்கள். லாபம் உண்டு. இறைவழிபாட்டால் நன்மை.
நண்பர்கள் ஆதரவு உண்டு

ரிசபம்
விமர்சனங்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். உடல் சோர்வாக இருக்கும். பணியில் திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். துக்கம்.

மிதுனம்
கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். துணையுடன் அன்யோன்யம். பயணம் உண்டு. லாபம் உண்டு.

கடகம்
கடன் நோய் உண்டாகும். பகை உண்டாகும். போட்டிகள் ஏற்படும்
கவனமாக இருக்க வேண்டிய நாள்

சிம்மம்
உடலில் எதிர்ப்பு சக்தி உண்டாகும். கூட்டு முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மனைவி மேல் காதல் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் நடந்தேறும்

கன்னி
சொகுசுப் பொருட்கள் சேர்க்கை உண்டாகும். கடன் ஏற்படும். கல்வி உண்டு. தாயிடம் ஆசி பெறுவீர்கள்.

துலாம்
பயணம், இளைய சகோதர சகோதரிகள் ஆதரவு உண்டு. மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி. குலதெய்வ வழிபாடு

விருச்சிகம்
தனவரவு உண்டு. சுக போஜனம் உண்டு.  கல்வி. புதிய விசயங்களை அறிந்து கொள்வீர்கள். சிலருக்கு கடன் உண்டாகும்

தனுசு
நற்சிந்தனை, புது முயற்சி, கீர்த்தி,
சகோதரர்களால் நன்மை

மகரம்
வரவும் செலவும் கலந்த நாள். சிவருக்கு மருத்துவ செலவுகள் உண்டு. கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள்.

கும்பம்
வெற்றிகரமான நாள். தனவரவு உண்டு. மூத்த சகோதரர்கள் நண்பர்கள் ஆதரவு உண்டு. லாபம் உண்டு.

மீனம்
பட்டம், பதவி, புகழ் உண்டு. தனவரவு உண்டு. புதிய தொழில் வாய்ப்புகள் உண்டு. நன்மையான நாள் இன்று.
செவ்வாயின் கிரக காரகத்துவங்கள்
------------------------------------------------------------


செவ்வாயின் காரக விளக்கங்கள்
சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகாமையில் பூமிக்கு அடுத்துள்ள கிரகம் செவ்வாயாகும். இந்த கிரகம் பூமியிலிருந்து பிரிந்து சென்று தனிக்கிரகமாக சூரியனை சுற்றி வருவதாக கூறப்படுகிறது. பூமி என்னும் நாம் வசிக்கும் மண் கோள் இரண்டாக உடைந்து , அதிலிருந்து தோன்றியதுதான் செவ்வாய் என்கிறார்கள். பொதுவாக மண் உருண்டை உடைந்தால் அது சுக்கு நூறாகவும் போகலாம், அல்லது சரி சமமாக இரண்டாகவும் உடையலாம். இங்கே பூமி உடைந்து சுக்கு நூறாக சிதறிப்போகாமல், இரண்டாக உடைந்து ஒரு பகுதி பூமியாகவும் , இன்னொரு உடைந்த பகுதி செவ்வாயாகவும் தனித்தனி சுற்றுப்பாதைகளில் சூரியனை சுற்றி வருகின்றன.  ஒரு மண் உருண்டை இரண்டாக உடைந்தால் , அந்த அரை உருண்டைகள் கடினமான பாறைகளை கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் அந்த உடை பட்ட அரை உருண்டைகளின் விழிம்புகள் மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். எனவே இந்த செவ்வாய் கிரகம் கடினமான , கூர்மையான பாறைகளை கொண்டதாகும். பூமியிலிருந்து பார்க்கும்போது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் பூமியில் ஜீவ ராசிகள் வசிப்பதுபோல் செவ்வாயிலும் ஜீவ ராசிகள் வசிப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
பூமியிலிருந்து பிரிந்த கிரகம் என்பதால் செவ்வாய்க்கு பூமகன் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பூமி, நிலம் போன்ற காரகம் செவ்வாய்க்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது.
பூமியில் வசிக்கும் நாம் பூமியை பூமித்தாய் என்கிறோம். அதாவது நாம் பூமியிலிருந்து தோன்றுவதால் பூ புத்திரர்கள் எனப்படுகிறோம். செவ்வாயும் பூமியிலிருந்து தோன்றியதுதான், ஆகவே செவ்வாய் நமக்கு சகோதர உறவு, மற்றும் நம் ரத்த சொந்தமாகும். இதன் அடிப்படையில் செவ்வாயை சகோதரக்காரகன் என்கிறார்கள். ரத்த சம்பந்தமான உறவுகளை குறிப்பதும் செவ்வாயாகும்.
ஆதி காலத்தில் மனிதன் கூரிய கற்களையே ஆயுதமாக பயன்படுத்தினான். கூர்மையான கடினமான பாறைகளை கொண்டது செவ்வாய் என்பதால் செவ்வாயை ஆயுதக்காரகன் என்கிறார்கள். ஆகவே அனைத்து விதமான ஆயுதங்களைக்குறிப்பது செவ்வாயாகும். ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளவர்களாகும். பூமியில் உள்ள கூர்மையான பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்கு உரியதாகும். இதன் அடிப்படையில் கூர்மையான பற்களையும் , கொம்புகளையும் கொண்ட மிருகங்களும் , கூரிய முட்களைக்கொண்ட தாவரங்களும் செவ்வாய்க்கு உரியவையாகும்.
ஆதி காலத்தில் மனிதன் கற்களிலிருந்துதான் நெருப்பை உருவாகினான். ஆகவே கற்களைக்குறிக்கும் செவ்வாயே நெருப்பையும் குறிப்பான். மனிதன் பயன்படுத்தும் கடினமான பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்கு உரியதாகும். உரல், உலக்கை, அம்மி, ஆட்டுக்கல் பொன்ற கல் பொருட்கள் செவ்வாய்க்கு உரியனவாகும்.
மனித உடம்பில் கடினமானதும் கூர்மையானதுமான உறுப்பு பற்களாகும். எனவே பற்களைக்குறிப்பவன் செவ்வாயாகும். உடல் எழும்புக்கு வலு சேர்ப்பவை எழும்பு மஜ்ஜையாகும். எனவே எலும்பு மஜ்ஜையை குறிப்பது செவ்வாயாகும். உடலில் செவ்வாயைப்போல் வலுவானதாகவும் சிவப்பு நிறமாகவும் காணப்படுவது தசைகளாகும். எனவே தசைகளுக்கு அதிபதி செவ்வாயாகும்.
உடலில் கூர்மையாகாவும் , விரைப்பாகவும் மாறி பெண்ணின் கன்னித்திரையை ஒரு ஆயுதம் போல் கிழித்து செல்லும் உறுப்பு ஆண் உறுப்பாகும். எனவே ஆண் குறியை குறிப்பது செவ்வாயாகும். ஆண் குறியில் பாயும் அதிக அளவு ரத்தமே அது விரைப்பு அடைவதற்கு காரணமாகும். ஆகவே ரத்தக்காரகனான செவ்வாயே வீர்யக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறான். உடலில் பாய்ந்தோடும் ரத்தம் சிவப்பு நிறத்தில் உள்ளதால் , அது செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
பூமியில் சிவப்பு நிறத்தில் காணப்படும் பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்கு உரியவையாகும். சிவப்பு நிறத்தில் உள்ள செம்பு உலோகம், பவள ரத்தினம், செம்பருத்தி மலர் போன்றவை செவ்வாய்க்கு உரியவையாகும்.
பூமியிலிருந்து பிரிந்து வந்த கிரகமான செவ்வாயை  பூமித்தாயின் வயிற்றை கிழித்துக்கொண்டு வந்தவனாகப்பாவிக்கிறார்கள். அதாவது தாயின் வயிற்றில் காயத்தை ஏற்படுத்திக்கொண்டு வந்தவன் என்பதால் உடலில் ஏற்படும் ரத்தக்காயம், புண் மற்றும் உடம்பில் உள்ள தழும்புகளுக்கு காரணமானவன் செவ்வாயாகும். பூமித்தாயின் வயிற்றையே கிழித்துக்கொண்டு வந்த கிரகம் என்பதால், செவ்வாயை கொடூரன், இரக்கமற்றவன் என்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்திற்கும் குரு கிரகத்திற்கும் நடுவே நிறைய விண் கற்கள் சுற்றி வருகின்றன. இந்த வின் கற்களை போர்வீரர்களாகவும், செவ்வாயை போர்ப்படை தளபதியாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். தெய்வங்களில் முருகன் சேனாதிபதியாக உருவகப்படுத்தபட்டுள்ளான். ஆகவே செவ்வாய்க்கு அதி தேவதை முருகனாகும்.
மண்ணிலிருந்து பிரிந்து மண்ணை அள்ளிச்சென்ற கிரகம் என்பதால் மண்ணாசையை தரும் கிரகம் செவ்வாயாகும். உலகத்தில் நடக்கும் அத்தனை போர்களுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும், பங்காளி சண்டைகளுக்கும் மண்ணாசையே காரணமாகும். ஆகவே சண்டை சச்சரவுகளைக்குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் யுத்த களத்தில்தான் ஆயுதங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. யுத்த களத்தில் ரத்தம் சிந்தப்படுகிறது.
ஆயுதக்காரகன் செவ்வாய் என்பதால் ஆயுதங்கள் பயன்படுத்தும் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் வந்துவிடுவார்கள். நாவிதர்,கசாப்புக்கடைக்காரர், கொலைகாரர், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், காவலர், ராணுவத்தினர் போன்றோர் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளவர்களாகும்.
நெருப்புக்காரகன் செவ்வாய் என்பதால் நெருப்பை பயன்படுத்துபவர்கள் அனைவரும் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவர். கொல்லர், சமையல்காரர் போன்றோர் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவர்.
மண் கிரகம் செவ்வாய் என்பதால் மண்ணில் வேலை செய்யும் விவசாயி, செங்கல் சூளைக்காரன், மண் பாண்டக்காரன்,கல் உடைப்போன் போன்றோர் செவ்வாயின் ஆதிக்கத்தில் வருவர். மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்குரியதாகும். செங்கல்,மண் பானை,மண்ஓடு ,மண் அடுப்பு, மண் பொம்மைகள் போன்றவை செவ்வாய்க்குரியவையாகும்.

சிறப்பு பதிவுகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 3

குருவே சரணம் குருவே துணை குரு பெயர்ச்சி பலன்கள் 3 (பொது பலன்கள்) இதன் முதல் இரண்டு பகுதியை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்த பக...

பிரபல பதிவுகள்